

அமைதிக்குப் பேர் போன லடாக்கில், அண்மையில் வெடித்த கலவரமும் வன்முறைச் சம்பவங்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடிவந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. லடாக், சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமானது.