

தமிழர்களின் பண்பாட்டில் பனைமரங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தாலும், அவை எந்தக் கட்டுப்பாடும் இன்றி வெட்டப்படும் நிலை பல ஆண்டுகளாக நிலவுகிறது. இந்தச் சூழலில், மக்கள் இனித் தவிர்க்கவே முடியாத சூழலில்தான் பனைமரங்களை வெட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டிருப்பது, நம்பிக்கை அளிக்கிறது.
சுற்றுச்சூழலைப் பேணுவதில் பனை முக்கியத்துவம் வாய்ந்தது. நீர்நிலை ஓரங்களில் வளர்ந்துள்ள பனைமரங்கள், மண் அரிப்பைத் தடுப்பதன் மூலம் கரைகளுக்கு அரணாக விளங்குகின்றன. பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, உத்தரம், அறைக்கலன்கள் உள்படப் பல்வேறு பொருள்களுக்கு ஆதாரமாக இருக்கும் பனை ‘கற்பகத்தரு’ என்றே போற்றப்படுகிறது. பனைமரத் தொழிலாளர்கள் இன்றைக்கும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். பனை, தமிழகத்தின் ‘மாநில மரம்’ என்கிற சிறப்பையும் பெற்றுள்ளது.