

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எழும் அதிருப்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த விதிமுறைகள் உதவும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13 முதல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் பிரச்சாரத்துக்கு அனுமதி தரக் கோரிக்கைவிடுத்து அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தப் பாரபட்சமும் இன்றி உடனுக்குடன் காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க அறிவுறுத்த வேண்டும்; தமிழ்நாடு காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று தவெக தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. தங்களுக்கு விதிக்கப்படுவதைப் போல மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என்று தவெக தரப்பு வாதிட்டது.