

ஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுவந்த நிலையில், இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 50% வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதனால், ஏற்றுமதி 70% அளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர், நொய்டா, சூரத் ஆகிய நகரங்களில் உள்ள ஜவுளி / ஆடை உற்பத்தியாளர்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள். இந்நிலையில், திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும் என்கிற குரல் தமிழக முதல்வரிடமிருந்து எழுந்திருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, உக்ரைன் போர் தொடர்ந்து நடத்தப்படுவதற்குக் காரணமாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். உக்ரைன் போரில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைக் காரணம் காட்டித்தான் 50% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இந்தியா போன்ற இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் வர்த்தகப் போர் என்றே இது கருதப்படுகிறது.