

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தமிழக அரசு அக்கறை காட்டாவிட்டால், தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் எச்சரித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்ட பிறகும், நீதிமன்றத்தின் தலையீடுகள் மூலமே தீர்வை நோக்கி நகர வேண்டியிருப்பது வருத்தத்துக்கு உரியது.
மண் வளத்துக்கும் நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, 2015இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்த வேறு சிலரின் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சில நாள்களுக்கு முன் இந்த வழக்கை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது.