

அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவரும் ஊழியர்களும் ஓய்வுபெற்ற ஊழியர்களும் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட முடிவை அறிவிக்க உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஓய்வூதியர்களும் அவ்வப்போது இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதும், அந்தப் போராட்டங்களுக்கு அரசிடமிருந்து சாதகமான பலன் கிடைக்காமல் போவதும் துரதிர்ஷ்டவசமானது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏறக்குறைய 1.20 லட்சம் ஊழியர்களும், 94,000 ஓய்வூதியர்களும் உள்ளனர். பொதுத் துறையின்கீழ் வரும் அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியப் பணப்பலன்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்டுவிட வேண்டும்.