

‘அரசுப் பள்ளிகளில் உடற்கல்விப் (physical education) பாடத்துக்கான நேரத்தை ஆசிரியர்கள் பிற பாடங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது’ எனத் தமிழ்நாட்டின் துணை முதல்வரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்திவருவது வரவேற்கத்தகுந்தது. அதேவேளையில், விளையாட்டில் மாணவர்களின் திறனை அதிகரிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத் தடைகளாக உள்ள சில பற்றாக்குறைகள் சரிசெய்யப்படுவதும் அவசியம்.
விளையாட்டு இல்லாமல் கல்வி முழுமை அடைவதில்லை. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ அதன் வளாகத்தில் விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும் என்பது பள்ளிக்கான அரசின் அங்கீகாரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. ஒரு மாணவர் வாரத்தில் குறிப்பிட்ட சில நாள்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இந்த விதிமுறை உறுதிப்படுத்துகிறது. எனினும் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை.