

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயதுச் சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தச் சம்பவம் நடந்து 10 நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட பிறகும் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்கிறது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் குற்றங்கள் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024இல் 52.3% அதிகரித்துள்ளன. ஒருபக்கம் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் மறுபக்கம் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் ‘பதிவுசெய்யப்படும் குற்றங்க’ளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதைக் கொள்ளலாம்.