

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவைக் கொட்டினால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மருத்துவக் கழிவைப் பொதுவெளியில் கொட்டும் போக்கைத் தடுக்க இச்சட்டம் உதவும். அபாயகரமானதாகக் கருதப்படும் மருத்துவக் கழிவு, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டாயமாக அகற்றப்பட வேண்டும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் ரகசியமாகத் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டும் போக்கு நீடித்துவருகிறது. ஏற்கெனவே 2018இல் கேரள மருத்துவக் கழிவைத் தமிழகத்தில் கொட்ட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. என்றாலும், இந்தப் போக்கு நின்றபாடில்லை.