

பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் 12 நாள்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரக் கோரிக்கைக்காக அவர்கள் அடிக்கடி போராடும் நிலை முடிவுக்கு வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் உடற்கல்வி, கணினி அறிவியல் போன்ற சிறப்புப் பாடங்களைக் கற்பிக்கப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான அரசாணை 2011இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டது.
2012இல் 7,000 பள்ளிகளில் 16,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடைபெற்றது. இவர்கள் வாரத்துக்கு மூன்று வகுப்புகள் எடுக்கின்றனர்.