

சான்றிதழ் வழங்குவதற்குக் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரகம் வலுப்படுத்தப்பட வேண்டும்; தனக்கு வரும் புகார்களைப் பிற துறைகளுக்கு அனுப்பிவைத்துத் தபால் அலுவலகம்போல அந்தத் துறை செயல்பட முடியாது” என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பவையாக உள்ளன. மதுரையைச் சேர்ந்த மலர்ச்செல்வி என்பவர் தனது பூர்விகச் சொத்துகள் சிலவற்றைப் பெறுவதற்காகச் சட்டபூர்வ வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் அளிக்கக் கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் பெற்றது குறித்து, ஊழல் தடுப்பு - கண்காணிப்பு இயக்குநரகத்தில் அவர் புகார் செய்தார்.