

தமிழ்நாட்டின் 4 சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடிக்குக் கட்டணம் நிலுவை வைத்திருப்பதும், அந்தச் சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பதும் வருத்தம் அளிக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது மாநில அரசின் பொறுப்பு.
மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டூர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர், நாங்குனேரி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.276 கோடி நிலுவை வைத்திருப்பதாகக் கூறி, இந்த சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தன.