

சாலை விபத்துகளில் சிக்கித் தவிக்கும் மாநிலமாகத் தமிழகம் இருக்கும் சூழலில், அந்த நிலையை மாற்ற உடனடிச் செயல்திட்டம் தேவை எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. மனித உயிர்களின் மதிப்பை ஆட்சியாளர்கள் உணர்ந்து, உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டிய தருணம் இது.
இந்திய அளவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளன. ஆண்டுக்குச் சராசரியாக 1,78,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் இதில் 60% பேர் 18-34 வயதுக்கு உள்பட்டவர்கள் எனவும் 2024 டிசம்பரில் மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.