தலையங்கம்
ரயில் விபத்துகள் தொடர்கதையாகக் கூடாது!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு வெவ்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி, மனித அலட்சியத்துக்குக் கொடுக்க வேண்டிய விலை எவ்வளவு மோசமானது என்பதையே இவ்விபத்து தீவிரமாக உணர்த்தியிருக்கிறது.
ஜூலை 8 அன்று காலை, செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் வழக்கம்போல பள்ளி வாகனத்தில் பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே கேட்டை மூட வேண்டிய வாயிற்காவலர் ரயில் வரும் நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், அவரது அலட்சியத்தால்தான் விபத்து நிகழ்ந்தது என்றும் முதற்கட்டத் தகவல்கள் கூறின.
