

தமிழ்நாட்டில் இலவசக் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோர்களைத் தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை வழங்குவதில் இழுபறி நீடிப்பது இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2010இல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவது ஓர் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகள் 25% இடங்களை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய சட்டம் இது.