

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டுப் புகாரின்பேரில் காவல் துறையால் விசாரணை செய்யப்பட்டு, சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்படுபவரைச் சித்திரவதை செய்வது உள்படப் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகக் காவல் துறை தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது, மக்களிடையே அத்துறை மீது அச்சத்தையும் அவநம்பிக்கையையுமே ஏற்படுத்தும்.
மடப்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் காவல் பணியில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (27). அவரோடு சிலர், கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்திடமிருந்து நகைகளைத் திருடியதாக ஜூன் 27 அன்று குற்றம் சாட்டப்பட்டனர். மறுநாள் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரித்து அனுப்பப்பட்ட அஜித்குமாரை மானாமதுரை உட்கோட்டத் தனிப்படையினர் மீண்டும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.