நீதிமன்ற அவமதிப்பை அதிகாரிகள் தவிர்க்க முடியாதா?
அரசு ஊழியர்களும் பொதுமக்களும் சட்டத்தை மதிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகளே தொடர்ச்சியாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கூடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தைப் பள்ளி நிர்வாகம் காலி செய்ய வேண்டும் எனவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் ‘ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாடு பிரிவு’ சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஏற்கெனவே பள்ளி நிர்வாகம் 2009இல் மனு தாக்கல் செய்து, மாற்று இடம் வழங்கப்படுவதற்கான நீதிமன்ற ஆணையை 2019இல் பெற்றுள்ளதாகக் கூறினார். மாற்று இடத்துக்கான திட்டம் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆறு மாதங்களுக்குள் இடத்தை ஒதுக்கீடு செய்யும்படி உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தது.
