

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‘ஃபால்கன் 9’ ஏவூர்தி மூலம் வெற்றிகரமாகப் புறப்பட்டிருக்கிறார் ஷுபன்ஷு சுக்லா. ரஷ்ய விண்கலமான சோயுஸ் மூலம் 41 ஆண்டுகளுக்கு முன் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றதற்குப் பிறகு, ஷுபன்ஷு சுக்லா தற்போது விண்வெளிக்குச் சென்றுள்ளார். அது மட்டுமல்லாமல், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் (ஐ.எஸ்.எஸ்.) செல்லும் முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்று, இந்தியாவின் பெயரை விண்வெளி நிலையத்தில் பதித்திருக்கிறார்.
முதலில் மே 29இல் புறப்படத் திட்டமிட்டிருந்த ‘அக்ஸியம் 4’ விண்வெளிப் பயணம், உகந்த வானிலை இல்லாதது, தொழில்நுட்பக் கோளாறு எனப் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுத் தற்போது வெற்றிகரமாகப் புறப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் தளபதி (கமாண்டர்) நாசாவின் பெகி வைட்சன். இவர் ஐ.எஸ்.எஸ்ஸின் முதல் பெண் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. போலந்தின் ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.