

சென்னை பெரம்பூரில் தண்ணீர் லாரி ஏறியதால் பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்துக்குப் பிறகு காலை, மாலை வேளைகளில் வாகனக் கட்டுப்பாடுகளை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். ஆனால், போக்குவரத்துக் காவலர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்ய ஓர் உயிரிழப்பு தேவைப்படுகிறது என்பது கவலையளிக்கிறது.
சென்னை கொளத்தூர், பொன்னியம்மன்மேடு தெருவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி செளமியா, ஜூன் 18 அன்று தாயாருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, பேப்பர் மில்ஸ் சாலையில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதால் உயிரிழந்தார். பெற்றோர் கண் முன்னே ஒரு குழந்தை உயிரிழப்பது, வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு வேதனையைத் தரக்கூடியது.