

உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழியில் வாதாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார். கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட நிலையை நீதிமன்றங்களில் அனுபவிக்கும் லட்சக்கணக்கான மக்களின் குரல் என்றே இதைக் கூறலாம்.
ஆங்கிலம் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் வாதாடுவதற்கான மொழியாக இருப்பது தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஆங்கிலேயர் கால நடைமுறைகளில் ஒன்று. இந்திய அரசமைப்புச் சட்டம், மக்களின் தற்சார்பு உரிமையையும் நாட்டின் பன்முகத்தன்மையையும் கருத்தில் கொண்டு ஆங்கிலத்தோடு உள்நாட்டு மொழிகளிலும் வாதாட அனுமதிக்கிறது.