

சாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக வருவாய்த் துறையினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பது, சாதி, மத அடையாளங்களைத் துறப்போருக்கு உதவுவதாக அமையும். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்குச் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் எந்த உத்தரவும் இல்லை என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.