

விதிமுறைகளை மீறிக் கூடுதலான நுழைவுச்சீட்டுக் கட்டணம் திரையரங்குகளால் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, திரைப்படம் என்னும் பொழுதுபோக்குக்காக மக்கள் அளவுக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் இனியாவது மாறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
புதிய படங்கள் வெளியாகும் முதல் நான்கு நாள்களுக்குத் திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக 2017இல் ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். குறிப்பாக, அந்தச் சமயத்தில் வெளியான ‘விவேகம்’ படத்துக்குச் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அதைப் பார்வையாளர்களுக்குத் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.