

அரசு சேவை இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இத்தகைய காப்பகங்களில் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏழை எளியவர்கள் அரசை மட்டுமே நம்பி அடைக்கலம் தேடும் இடங்களில், குற்றங்கள் அச்சமின்றி அரங்கேறும் சூழல் நிலவுவதைத் தமிழக அரசு ஓர் இழிவாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவற்றவர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், சில சமூகக் கொடுமைகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் போன்றோருக்காகத் தமிழகச் சமூக நலத் துறையின்கீழ் அரசு சேவை இல்லங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள பெண் குழந்தைகள் 12ஆம் வகுப்பு வரைக்கும் பயில முடியும். கைவிடப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளையும் இல்லத்தில் வளர்க்க அனுமதிக்கப்படுகின்றனர். தங்குமிடம் மட்டுமல்லாமல், உணவு, சுகாதாரம் - மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்புக்கான கூடுதல் பயிற்சி ஆகியவையும் அரசால் வழங்கப்படுகின்றன. இத்தகைய அரசு சேவை இல்லங்கள் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் உள்ளன.