

நாடு முழுவதும் உள்ள மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய இடமான நாடாளுமன்றத்தில், முதன்மையான அமைப்புகளாக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அவற்றின் கூட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே பங்கேற்பது, நாளடைவில் நிலைக்குழுக்களை வெற்றுச் சம்பிரதாய அமைப்புகளாக ஆக்கிவிடும் என இந்திய அரசமைப்புச் சட்ட ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சட்டம் இயற்றுவதும் அதை அமல்படுத்தும் நிர்வாகப் பிரிவை மேற்பார்வை செய்வதும் இந்திய நாடாளுமன்றத்தின் தலையாய பணிகளாக அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. அதை நடைமுறையில் கொண்டுவருவதற்கான ஒரு வழிமுறையாக நாடாளுமன்றம் பல்வேறு வகையான குழுக்களைக் கொண்டுள்ளது.