

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஒரு நடவடிக்கையாக மக்களின் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துவது தொடர்கதையாகவே நீடிக்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் வசித்துவந்த ஏறக்குறைய 600 குடும்பங்களைத் தமிழக அரசு அண்மையில் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், காந்தி நகர், மூகாம்பிகை நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களின் குடும்பங்களே வசித்துவருகின்றன. இவர்களின் வீடுகளும் கடைகளும் அடையாறு கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு கடந்த மே மாதத்திலிருந்து வெவ்வேறு கட்டங்களாக அவற்றை இடித்து அப்புறப்படுத்தி வருகிறது.