

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, கடந்த 2024 டிசம்பர் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாலியல் வல்லுறவு உள்ளிட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், எவ்விதத் தண்டனைக் குறைப்பும் சலுகையும் இன்றிச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கண்டிப்பாக வலியுறுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்படும் பெண்கள் துணிந்து புகார் தெரிவிக்கலாம் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதும் இந்த வழக்கில் திறம்பட விசாரணையை மேற்கொண்ட மூன்று ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் செயல்பாடும் பாராட்டுக்குரியவை.