

கொச்சி அருகே சரக்குக் கப்பல் கவிழ்ந்த விபத்தும், கப்பலில் இருந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய வேதிப்பொருள்கள் கடலில் கலந்துவரும் அபாயச் சூழலும் மிகுந்த கவலை அளிக்கின்றன. கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எம்எஸ்சி எலிசா 3 என்கிற வெளிநாட்டுச் சரக்குக் கப்பல், மே 24 அன்று கொச்சி அருகே அரபிக் கடலில் கவிழ்ந்தது.
பலத்த காற்றும் கனமழையுமான வானிலை, இன்ஜின் செயலிழப்பு, சமநிலை தவறிய சரக்கு ஏற்றம் போன்ற காரணங்களால் கப்பல் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கப்பலில் பணிபுரிந்த 24 பேரைக் கடலோரக் காவல் படையின் துணையுடன் இந்தியக் கடற்படை மீட்டது.