

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் நம்பிக்கை அளிக்கிறது.
புகுந்த வீட்டினரால் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005’இன் கீழ் சட்ட உதவி பெறுவதிலும், புகுந்த வீட்டைவிட்டுத் துரத்தப்பட நேர்ந்தால் அவர்கள் தங்குவதற்கான மையங்களை அமைப்பதிலும் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய வலியுறுத்தி ஓர் அரசு சாராத் தொண்டு நிறுவனம் (We the women of India) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.