

‘சமக்ர சிக் ஷா அபியான்’ (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6% வட்டியுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் நீதிமன்றத்தை நாடும் நிலை மாநில அரசுக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஏற்கெனவே அமலில் இருந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டம், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக் ஷா அபியான் போன்றவற்றை உள்ளடக்கி 2018-19இல் ‘சமக்ர சிக் ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்குத் தேவைப்படும் நிதியில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் வழங்க வேண்டும். இத்திட்டத்துக்கு நடப்புக் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.