

தமிழகக் காவல் நிலையக் கழிப்பறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளனவா என்கிற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. இக்கேள்வி, விசாரணைக் கைதிகளுக்கு மாவுக்கட்டு போடும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்கிற பார்வையை உணர்த்தியிருக்கிறது. வழக்கு ஒன்றில் கைதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவருக்குக் கை, கால் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கோரி அவருடைய தந்தை இப்ராஹிம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில், “ஜாகீர் உசேனுக்கு எப்படிக் காயம் ஏற்பட்டது?” என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு வழக்கறிஞர், “கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது; உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அப்போது ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?’ என்கிற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், “அந்தக் கழிப்பறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.