

தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெறிநோயால் (ரேபிஸ்) உயிரிழப்போரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட சில விலங்குகளிடமிருந்து பரவும் வைரஸ் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் வெறிநோய் ஏற்படுகிறது. தொற்றுக்குள்ளான நாய் கடிப்பது அல்லது அதன் எச்சில் படுவதுதான் வெறி நோய்க்கான முதன்மைக் காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுத் தற்காத்துக்கொள்ள முடியும்.
எனினும், பல்வேறு காரணங்களால் இந்நோயின் தாக்கம் மரணத்தில் முடிவதே நடைமுறைக் காட்சியாக இருக்கிறது. 2024இல் தமிழகத்தில் 47 பேர் வெறிநோயால் இறந்துள்ளனர். இது முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிக அதிகம். ஏறக்குறைய 4.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு உள்ளாகினர். சிகிச்சையைத் தவிர்ப்பவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டவர்கள் ஆகியோரைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.