

வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரியான தரவுகள் பதிவு செய்யப்படும் என ஏப்ரல் 30இல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பல தரப்பினரின் நெடுங்காலக் கோரிக்கையாக இருந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
ஒருவரின் வயது, பாலினம், ஊர், மதம், மொழி, தொழில், வருமானம் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுசெய்யப்படுகின்றன. சமூக, பண்பாட்டு, பொருளாதார நோக்கில் இந்தியாவைப் புரிந்துகொள்ள ஆங்கிலேயர்களுக்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பயன்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னரும், இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக ஆனது.