

வழக்குகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிய க.பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து பதவி விலகியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இயல்பாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் பதவி விலகல்கள், நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றிருப்பது திமுக தலைமையிலான தமிழக அரசுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிவந்த மூத்த அமைச்சர் க.பொன்முடி, ஆன்மிக உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாசமான கருத்தை அண்மையில் தெரிவித்தது பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ வழிவகுத்தது. இதையடுத்து அவருக்கு அரசியல்ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தன. பொன்முடி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, தாமாகவே முன்வந்து விசாரிக்கத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார்.