

குறைவான கட்டணத்தில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், கழிப்பறை வசதிகளைக் கொண்டிருப்பதும் ரயில் சேவையின் தனிச்சிறப்பு. ஆனால், ரயிலை ஓட்டும் லோகோ பைலட்களுக்கும் உதவி லோகோ பைலட்களுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளக் கழிப்பறை வசதி இல்லை என்பது வருந்தத்தக்க முரண்பாடு.
இந்தியாவில் ஏறக்குறைய 15,000 ரயில் இன்ஜின்கள் இயக்கப்படுகின்றன; ஏறக்குறைய 80,000 ஓட்டுநர்களும் 57,000 உதவி ஓட்டுநர்களும் பணிபுரிகின்றனர். குறுகிய நேரப் பயணம் எனில், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையக் கழிப்பறையையோ, பயணிகளின் கழிப்பறையையோ இவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது; இடைநிறுத்தங்கள் இல்லாப் பயணம் எனில், குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.