

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் 266ஆவது தலைவரான போப் பிரான்சிஸின் (88) மறைவு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தன்மை கொண்டிருந்த போப் பிரான்சிஸ், போர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். அமைதியை விரும்புபவர்கள் மத்தியில், அவரது மறைவு பெரும் சோர்வை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
சிரியாவைச் சேர்ந்த போப் கிரிகோரி III பொ.ஆ.741இல் மறைந்த பிறகு ஐரோப்பியர் அல்லாத ஒருவர் ரோமின் பிஷப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த வகையில் போப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் போப் பிரான்சிஸ். புனித பீட்டர் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யேசு சபையினரும் இவரே.