தலையங்கம்
குப்பை அகற்றும் பணி: மக்களின் பாதுகாப்பே முக்கியம்!
சென்னை கொடுங்கையூரிலும் மணலியிலும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏற்கெனவே நிறுவப்பட்ட இரண்டு எரிஉலைகளால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் முறையிட்டுவரும் சூழலில், கொடுங்கையூரில் இன்னொரு எரிஉலையை சென்னை மாநகராட்சி நிறுவ இருப்பது விமர்சனத்துக்குரியது.
சென்னை மாநகராட்சி ஒரு நாளைக்கு 5,900 டன் குப்பையைக் கையாள்கிறது. நகரத்தின் மொத்த குப்பையும் கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் கொட்டப்பட்டு வருகிறது. ஆண்டுக்கணக்கான குப்பைகளால் இந்த இரண்டு பகுதிகளிலுமே காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு, நச்சு உலோகப் படிமங்களின் பரவல் போன்றவற்றால் கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.
