

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான தஹாவர் ஹுசைன் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வெற்றி. இதன்மூலம் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து உலகத்துக்கு அம்பலப்படுத்தும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
2008 நவம்பர் 26 அன்று, தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி, நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் எனக் குறிப்பிடப்படும் மும்பையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலகையே அதிரவைத்தது.