

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் இழப்பை ஆட்சியாளர்கள் உணராதது ஏன் என்கிற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8 அன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.100ஐ மத்திய அரசு குறைத்தது. இதனால் சிலிண்டர் விலை ரூ. 918.50லிருந்து ரூ.818.50ஆகக் குறைந்தது. கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.