

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேசிவரும் வேளையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் குறிப்பிட்டுள்ளபடி சட்டக் கட்டமைப்புக்குள் செயல்படத் தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது. அதன்படி உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை அல்ல; தேர்தல் முன்னேற்பாடாகத் தகுதிவாய்ந்த வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பது, எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட பணிகளும் முக்கியமானவை.