

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் பிப்ரவரி மாதத்திலேயே கடுமையான வெப்பநிலை நிலவியது. 124 ஆண்டுகளில் மிக அதிக வெப்பநிலை நிலவிய பிப்ரவரி இது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூரில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்ட நிலையில் வேலூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.
உலகம் முழுவதுமே 2024ஆம் ஆண்டில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கோடைக்கு முன்னதாகவே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸையும் கடற்கரையோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸையும் மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸையும் தாண்டினால் அதை வெப்ப அலையாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கிறது.