

சுகாதாரக் கட்டமைப்பின் அடித்தளமாகக் கருதப்படுகிற ஆரம்ப சுகாதார மையங்களில் நோயாளிகள் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற முடிவதில்லை என்கிற புகார்கள் அடிக்கடி எழுகின்றன. நோயாளிகளின் உடல்நலக் கோளாறுகள் சிக்கலாவது, சில வேளைகளில் உயிரிழப்பு ஏற்படுவது, நோயாளிகளின் உறவினருக்கும் மருத்துவமனைப் பணியாளருக்கும் இடையே மோதல் உருவாவது என இதன் பின்விளைவுகள் கவலை அளிக்கின்றன.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிப்ரவரி 7 அன்று இரவில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அங்குள்ள நகர்ப்புற சமுதாயநல மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததாலும் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்குச் செல்ல உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும் அப்பெண்ணுக்குக் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.