

இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-2024 ஆண்டுக்கான வளர்ச்சி அறிக்கையின்படி, தமிழ்நாடு சிறு - நடுத்தரத் தொழில்கள் மூலமாக இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த தரவுகளைத் தமிழக அரசு ஜனவரி 7ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேற்கண்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 39,699 தொழில் நிறுவனங்கள் மூலம் 4,81,807 தொழிலாளர்கள் 8,42,720 உழைப்பு நாள்களைப் பெற்றுள்ளனர்.
இது வரவேற்கத்தக்கது! ஒரு நாளில் ஒருவர் எவ்வளவு வேலை செய்கிறார் என்கிற துல்லியமான அளவு ‘உழைப்பு நாள்’ (man day) எனப்படுகிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் பல ஆண்டுகளாக முன்னிலை வகித்துவரும் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைவிட, தமிழ்நாடு இதில் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது.