

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊராட்சிப் பகுதிகளை நகராட்சியோடு இணைப்பதால் தங்களுக்குக் கிடைத்துவரும் நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்படும் எனக் கிராமப்புற ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவில் நகரமயமாக்கலில் முன்னிலை வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள்தொகை 48.45%. தற்போது அது அதிகரித்திருக்கும் நிலையில், நகரமயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் மாநகராட்சி, நகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.