

அண்மைக் காலமாக உலகம் முழுவதும் அணைகளால் பழங்குடியினருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர் வளத்துக்கும் ஏற்படும் இழப்புகள் ஆய்வுகளின் அடிப்படையில் அதிகக் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
இதன் விளைவாக அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான அணைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. உலக அணைகள் ஆணையத்தின் அறிக்கையின்படி, அணைகள் கட்டும்போது மூன்று நிலை பாதிப்புகளை ஒரு சூழலியல் தொகுதி எதிர்கொள்கிறது.
முதல் நிலையில் ஆற்றின் இயற்கை நீரோட்ட மாற்றம் அதன் இயற்பியல், வேதியியல், புவியியல் பண்புகளை மாற்றி, கீழ்ப்படுகைப் பகுதிகளில் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் நிலையில் வண்டல் மண், ஊட்டச்சத்துச் சுழற்சி, சூழலியல் தொடர்ச்சி அறுபட்டு, மொத்த உற்பத்தித் திறன் குறைகிறது. மூன்றாம் நிலையில் ஆற்றின் பல்லுயிர் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் நதிகளின் செயல்பாடுகளும் சேவைகளும் மீளமைக்க முடியாத சேதத்தை எதிர்கொள்கின்றன.
எச்சரிக்கை
கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி 800 கி.மீ. பயணித்து வங்கக்கடலில் கலக்கும் காவிரியில், 19 இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன (கர்நாடகத்தில் 6, தமிழகத்தில் 13). பல நூற்றாண்டுகளாகவே காவிரியின் பல்லுயிர் வளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 142 மீன் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அவற்றில் 15 இனங்கள் இப்பகுதிக்கே உரியவை. மேலும் பெரிய நன்னீர் இறால், நன்னீர் சொறி (ஜெல்லி) மீன், மயில் கெண்டை ஆகியவை குறிப்பிடத்தக்க இனங்களாகும். மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு, ஹில்சா மீன் உள்ளூர் அளவில் அழிந்திருப்பது, அணைகள் குறித்த எச்சரிக்கையை வலுப்படுத்துகிறது.
பெங்களூரு நீர்த் தேவைக்காக மேகேதாட்டு அணைத் திட்டம் கர்நாடக அரசால் முன்மொழியப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 130.5 கோடி லிட்டர் எடுக்கப்படுகிறது; 2030இல் 228.5 கோடி லிட்டராக இது உயரும் என்றும், இதற்கு அணை தேவை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த அணையின் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும், 67 டிஎம்சி தண்ணீரும் சேகரிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.