

அண்மைக் காலமாக, புதிய மேம்பாலங்களைத் திறந்துவைப்பது வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. நகரங்களின் நெரிசலுக்குத் தீர்வாகவும் நவீனமான, வேகமான இயக்கத்துக்கான உத்தரவாதமாகவும் ஆங்காங்கே எழுந்துநிற்கும் இந்த கான்கிரீட் கட்டுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நமது நகரத்தின் முக்கிய வழித்தடத்தில் பயணிக்கும் யாரிடம் கேட்டாலும் இந்தத் தீர்வு ஏற்கெனவே காலாவதியாகிவிட்டதாகக் கூறுவார்கள்.
ஒரு சிறிய இடத்தில் பாலங்கள் நெரிசலைத் தவிர்த்தாலும் மற்றோர் இடத்தில் இன்னும் அதிகமான நெரிசலை உருவாக்குகின்றன. பாலங்களால் மக்களுக்கான பரவலான பயன்பாடு பெரிதாக இருப்பதில்லை. இதற்கு முக்கியக் காரணம், போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கப் புதிய கட்டுமானங்கள் வேண்டும் என்னும் பழைய நகர வடிவமைப்பு சார்ந்த பார்வையை நாம் இன்னமும் கைவிடாததுதான்.
உண்மையில், புதிய சாலைகள் வாகனம் ஓட்டுவதைச் சுலபம் ஆக்குகின்றன. இது அதிகமான தனியார் வாகனங்களைச் சாலைக்குக் கொண்டுவருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்னும் தீவிரமடைகிறது. இந்த நெரிசலைத் தீர்க்க, அரசு மீண்டும் மக்கள் பணத்தைச் செலவு செய்யும். இது ஒரு சுழற்சியாக நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.
வாழ்வதற்கான சூழல்
உலகின் பல முன்னேறிய நாடுகள், இந்த முறையைக் கேள்விக்கு உட்படுத்தி வருகின்றன. தென் கொரியாவின் தலைநகரமான சியோல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சியோங்ஜியோன் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை ஒன்று நிர்வாகத்தால் அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஆறு கிலோமீட்டருக்குப் பொதுப்பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு 15% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவில்லை. நகரம் ஆரோக்கியமானதாகவும் வாழக்கூடியதாகவும் மாறியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லேண்ட், பாரிஸ் நகரங்கள், மக்களுக்கான இடத்தை மீட்டெடுக்க நகர்ப்புற நெடுஞ்சாலைகளை அகற்றியுள்ளன. வருங்காலத்தில் நகர நிர்வாகம் என்பது எந்த நகரத்தில் போக்குவரத்து வேகமாக இயங்குகிறது என்பதைப் பற்றியதாக இல்லாமல், எந்த நகரம் மனிதர்கள் வாழ மிகவும் விரும்பத்தக்கது என்பதாக மாறும்.