

ஓர் உயிர் இன்னொரு உயிருக்குள் கருவாய் உருவாகித் துடிக்கும் அந்த நிமிடம் - வேறு எந்த ஒரு விஷயமும் தர இயலாத அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், அதே கர்ப்பம் விரும்பப்படாத வகையில் - பாலியல் வன்கொடுமை காரணமாகவோ, சூழலின் கொடுமையாலோ ஏற்படும்போது, அது ஒரு பெண்ணுக்குச் சுமையாகவும் அச்சமாகவும் அவமானமாகவும் மாறிவிடுகிறது.
இத்தகைய நெருக்கடியான தருணங்களில் சட்டம், மருத்துவர்கள், நீதிமன்றங்கள் அந்தப் பெண்ணையும் அவள் சுமக்கும் கருவையும் எவ்விதம் கையாள்கின்றன என்கிற கேள்வி இன்று மிகவும் அவசியமானதாக உள்ளது.
சட்டத்தின் பரிணாம வளர்ச்சி
‘தங்கள் உடல், இனப்பெருக்கச் செயல்முறை சார்ந்த உரிமையைத் தங்களது கட்டுப்பாட்டில் பெண்கள் வைத்திருக்காதவரை சுதந்திரம், சமத்துவம், முழு மனிதக் கண்ணியம், ஆளுமை எதுவும் சாத்தியமில்லை’ என்கிறார் அமெரிக்கப் பெண்ணியவாதி பெட்டி பிரீடன்.
இந்தக் கருத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்தியச் சட்டங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கிவருகின்றன. இந்தியாவில் கருக்கலைப்பு உரிமைகள் ‘சிகிச்சை சலுகை’ என்பதில் இருந்து, ‘பெண்ணின் உரிமை’ என்கிற நிலையை நோக்கி முன்னேறி வருகின்றன.
மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டத் திருத்தம் 2021 (MTP- The Medical Termination of Pregnancy (Amendment) Act, 2021) மிக முக்கியமானது. இதன்படி கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
‘திருமணமான பெண் மற்றும் அவரது கணவர்’ என்கிற வரையறை நீக்கப்பட்டு, ‘பெண் மற்றும் அவரது கூட்டாளர்’ என மாற்றப்பட்டுள்ளது; இதனால் திருமணம் ஆகாத பெண்களும் கருத்தடை தோல்வி ஏற்பட்டால் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை பெறுகின்றனர்.
24 வாரங்களுக்கு மேல் கருவில் குறைபாடுகள் இருப்பின், நீதிமன்றம் / மருத்துவ வாரியத்தின் பரிந்துரையுடன் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் குரல்
26 வாரக் கர்ப்பத்தைச் சுமந்த 15 வயதுச் சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது சிறுமியின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல’ என்று சொல்லி முன்னதாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.