

மேற்கு ஆசியாவை அதிரவைத்துக்கொண்டிருக்கும் ஈரான் போர் தற்போதுதான் தொடங்கியது என்று கூற முடியாது. ஏனென்றால், 2025இல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோதே தற்போதைய போருக்கான ஒத்திகை தொடங்கிவிட்டது.
அந்தப் போர் 12 நாள்கள் நீடித்தது. தற்போது நடைபெறுவது இரண்டாம் அத்தியாயம். இம்முறையும் போரைத் தொடங்கியது இஸ்ரேல்தான். அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலால் பதற்றம் அதிகரித்த நிலையில், நல்வாய்ப்பாக இரண்டு வாரத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்கப்பட்டுள்ளது. சூளுரைகள், உயிரிழப்புகள், வெற்றி குறித்த மிகவும் முன்கூட்டிய அறிவிப்புகளைக் கடந்து, இந்தப் போரில் உண்மையில் தோல்வி யார் பக்கம்?
பக்கவிளைவுகள்
மற்ற போர்களைப் போல் அல்லாமல் இந்தப் போரின் வலியை ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து வருகிறது. உலகளவில் பணவீக்கம் உச்சத்தை நோக்கிப் பயணிக்கிறது. எரிபொருள் விலை பல நாடுகளில் 25 முதல் 50 சதவீதம்வரை உயர்ந்துள்ளது.
ஈரானில் உள்ள ஷஹ்ரான் நகரமே கரும்போர்வையால் பல நாள்கள் போர்த்தப்பட்டிருந்தது. தலைநகர் டெஹ்ரானில் உலோகங்கள், கந்தகம், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய காரணிகள் கலந்த மழையில் மக்கள் நனைந்தார்கள்.
காலநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு, பல்லுயிர்ப் பாதுகாப்பு, அணுசக்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு 1970களில் நிலைத்த வளர்ச்சி (sustainable development) என்கிற சிந்தனை தோன்றியது.
அதாவது - தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் நம்முடைய செயல்கள் இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையிலும் எதிர்காலத் தலைமுறையினரின் திறனைப் பாதிக்காத வகையிலும் அமைய வேண்டும். இந்தச் சிந்தனையானது பொறியியல், மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் பரவியது.
கூடுதல் சுமை
பசுங்குடில் வாயு உமிழ்வுகளில் அதிக அளவில் (42 - 48 சதவீதம்) பங்களிப்பது கட்டுமானத் தொழில். இதன் அடிப்படையில் கட்டிடவியல் துறைக்கான நெறிமுறைத் தொகுப்பு நூலான ‘IS:456-2000’இல் கட்டுமானங்களுக்குத் திறன்மிக்க கான்கிரீட் பரிந்துரைக்கப்பட்டது.