

புதிய விதிமுறைகள், இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடி ஆகியவற்றின் விளைவாக இந்தியாவில் விமானச் சேவைகள் பெருமளவில் ரத்தானதையும், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதையும் பார்க்க முடிந்தது. இதன் பின்னணி என்ன?
முந்தைய முடக்கங்கள்: தொடர்ந்து நாள் கணக்கில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வுகள் கடந்த காலத்திலும் பெருமளவில் நடந்தது உண்டு. கரோனா பொது முடக்கக் காலத்தில் விமானப் பயணங்கள் பல நாடுகளில் மாதக் கணக்கில் ரத்து செய்யப்பட்டன. கடும் புயல் காரணமாக ஹாங்காங்கில், பனிப்புயல் காரணமாக வட அமெரிக்காவில், நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில், எரிமலை வெடிப்பின் விளைவு காரணமாக இந்தோனேசியாவில் என்று இயற்கைச் சீற்றங்களின் காரணமாகவும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது உண்டு.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், பிரிட்டனில் மோனார்க் போன்ற விமான நிறுவனங்கள் வாரக் கணக்கில் தங்கள் விமானச் சேவைகளை நிறுத்தியது உண்டு. இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்தபோது, மூன்று நாள்களுக்கு அமெரிக்க விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. போர் காரணமாக உக்ரைனில் நீண்ட காலமாகப் பெருமளவு விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சியும் வீழ்ச்சியும்: எனினும் புதிய சட்டங்கள், விதிமுறைகளின் காரணமாக விமானப் பயணங்கள் பெருமளவு ரத்தாவது புதிது. இண்டிகோ விமானச் சேவை கடந்த வாரம் மிக அதிக அளவில் ரத்து செய்யப்பட்டது. இண்டிகோ ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 2,300 விமானப் பயணங்களை இயக்குகிறது. உள்நாட்டு விமானப் பயண எண்ணிக்கையில் அதன் பங்கு 65%. தனது 20 ஆண்டுப் பயணத்தில் பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது இண்டிகோ.