

தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி ஆகிய மூன்று சிறப்புப் பண்புகளையும் கொண்ட செம்மொழித்தமிழ் இன்று செய்யறிவுத்திறனுக்கான (Artifificial Intelligence - AI) மொழியாகவும் வளர்ச்சியடைய வேண்டும். நாம் எதிர்பாராத அளவுக்கு நாள்தோறும் செய்யறிவுத்திறன் துறை ஒரு உயர்ந்த கட்ட வளர்ச்சியைப் பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மனித மூளைகள் இணைந்து, பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் செய்கிற அறிவுசார்ந்த பணிகளைச் செய்யறிவுத்திறன் ஒரு சில நிமிடங்களில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறது.
செய்யறிவுத்திறனின் வெற்றிக்கு அடிப்படை, அதனுள் அமைந்துள்ள மனித இயற்கை மொழிகளுக்கான பெருமொழி மாதிரியே (Large Language Model – LLM) ஆகும். இதுவரை கணினியானது தனக்கென்று உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளையே (Programming Languages) பயன்படுத்தி வந்தது. இந்நிரல் மொழிகளைக் கற்ற கணினியியல் துறையைச் சார்ந்தவர்களால் மட்டுமே கணினியுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலும்.