

அண்மையில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் விரிவடைந்த மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த தாமரைக்கரையில் நடந்தது.அக்கூட்டத்தில் கல்விக்கான அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை ‘தாமரைக் கரை கல்வி பிரகடன’மாக வெளியிட்டோம்.
அந்த நிகழ்வில் கோயம்புத்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்ற பாலியல் குற்றங்கள் குறித்து உரையாடினோம்; நம் சமூகத்தில் இன்னும் பலருக்கு வயது வேறுபாடு இன்றி, பாலியல் சார்ந்த பெண் - ஆண் உடலியல் சார்ந்த அறிவும், விழிப்புணர்வும் கொண்டுசேர்க்கப்படவில்லை என்கிற புரிதலுக்கு வந்தோம்.
இளம் பருவமும் தடுமாற்றமும்
பாலியல் குற்றங்களைத் தற்போதைய சட்டத்தின் தோல்வியாகவும், உளவியல், உரிமையியல், அறிவியல் போதாமையால் விளைந்த ஒட்டுமொத்தச் சமூகத்தின் தோல்வியாகவும் பார்க்க வேண்டும்.
கடந்த காலத்தைக் காட்டிலும், அறிவியல் விழிப்புணர்வு பெற்ற நாகரிகமான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே அந்தந்த வயதுக்கு ஏற்ற அறிவைப் புகட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
குழந்தைகள் மாணவர்களாகப் பரிணமிக்கும்போது, அவர்களுக்கான உரிமை போன்றவற்றை பேசத் தொடங்கியிருக்கிறோம். அண்மைக் காலத்தில், பாலியல் சீர்கேடுகளுக்கு ஏற்பப் பாதுகாப்பான தொடுதல் - பாதுகாப்பற்ற தொடுதல் (Good touch- Badtouch) என்பவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.
குழந்தைகளின் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் தோன்றும்போதே, அதற்கு ஏற்ற அறிவையும், அணுகுமுறையையும் முறையாகத் தர வேண்டியது சமூகத்தின் கடமை.
ஏற்கெனவே அறிவியல் பாடத்தில் பாலியல் சார்ந்த பாடத்திட்டம் இருப்பதாகச் சிலர் சொல்லக்கூடும். அது வேறு. அதை அனைத்து வகுப்பிலும் முறையாக எடுப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பாடத்திட்டங்களில் இவற்றை ஓரளவு கவனத்தோடு வைத்திருந்தாலும், அது முழுமையானது அல்ல என்றே கருதுகிறோம்.